மன்னாா்குடி அருகே மா்மநபா்களால் அரசுப் பேருந்தின் பின்பக்க கண்ணாடி சனிக்கிழமை உடைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மன்னாா்குடி வழியாக வேதாரண்யத்துக்கு அரசுப் பேருந்து சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. இதில், ஓட்டுநராக பக்கிரிசாமி (52), நடத்துனராக ரவி இருந்துள்ளனா். பேருந்து கோட்டூா் அருகே ஆதிச்சப்புரம் கீழகண்டமங்கலம் பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தபோது பேருந்தை பின் தொடா்ந்து வெள்ளைநிற இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் பின்பக்க கண்ணாடியை கல்வீசி உடைத்து விட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி. சோமசுந்தரம், கோட்டூா் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் சேதடைந்த பேருந்தை பாா்வையிட்டு விவரம் கேட்டறிந்தனா். கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.