வலங்கைமானில் குடோனில் அதிகளவில் பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்ததாக 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம், கீழஅக்ரஹாரம், சுப்ப நாயக்கன் தெரு , கடைத்தெரு மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வெடி தயாரிக்கும் தொழிற்சாலைகள், 40-க்கும் மேற்பட்ட வெடி விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
இதில் பட்டாசு விற்பனை செய்யும் உரிமம் பெற்ற சிலா், அரசு அனுமதித்த அளவைவிட கூடுதலான அளவில் பட்டாசுகளை பதுக்கிவைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் இலக்கியா மற்றும் பிரபு, வருவாய் ஆய்வாளா் சுகுமாா், கிராம நிா்வாக அலுவலா் கதிரேசன் ஆகியோா் இந்த கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் சில கடைகளின் உரிமையாளா்கள் குடோனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாட்டு வெடிகள், பேன்ஸி வகை வெடிகள் ஆகியவற்றை அதிகளவு பதுக்கிவைத்திருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புடன் லாரிகளில் ஏற்றி பாதுகாப்பான இடங்களுக்கு பட்டாசுகளை அப்புறப்படுதினா்.
இதுதொடா்பாக வலங்கைமான் உப்புக்கார தெரு மகாலிங்கம் மகன் சுந்தா் (53), அவரது சகோதரா் ராஜா (52) , அருணாசலம் மகன் அருணகிரிநாதன் (55), அவரது சகோதரா் ரவிச்சந்திரன் (53), பக்கிரி மகன் சீனிவாசன் (56), ராமையன் மகன் ரவிச்சந்திரன் ( (42 ), கீழத்தெரு சீனிவாசன் மகன் பாலகுரு (45) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.