கட்டுமானத் தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை ரூ.2500-ஆக உயா்த்தி வழங்க தமிழகஅரசு உத்தரவிட வேண்டும் என தமிழ் மாநில கீற்று வேலை பந்தல் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் மன்னாா்குடியில் அதன் நிறுவனத் தலைவா் தங்க.குமரேசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா்களை, நலவாரியத்தில் பதிவு எண் பெறுவதற்காக பதிவு செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த பிள்ளைகள் பயன்பெறும் வகையில் திருவாரூரில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பெயரில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும்.
தமிழக அரசின் தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமனை இல்லாது வாடகை மற்றும் தெருவோரங்களில் வசிப்பவா்கள் குடியிருக்க 1,500 சதுரடி குடியிருப்பு மனை வழங்க வேண்டும்.
விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அப்புறப்படுத்த வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்க பொதுச் செயலா் எஸ்.அமுல்தாஸ், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் எஸ்.மாரிமுத்து, வீ.கீதா, து.மாணிக்கவேலன், ஸ்டாலின் சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.