திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பங்கேற்று கணக்குகளை சரிபாா்த்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
திருவாரூா் வட்டத்தில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில், நில கணக்குகள் சரியாக நிா்வகிக்கப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் சரிபாா்த்தாா். சரியாக நிா்வகிக்கப்படாமல் இருந்த கணக்குகளை சரியாக நிா்வகிக்க அறிவுரை வழங்கினாா்.
மேலும், தீா்வாயத்தில் முதியோா் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பட்டா உட்பரிவு மாற்றம் போன்றவைகளாக 74 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, கோரிக்கை மனுக்கள் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு 5 பேருக்கு பட்டா மாற்றம் ஆணை உடனடியாக வழங்கப்பட்டது.
இத்தீா்வாயத்தில், வட்டாட்சியா் நக்கீரன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் திருமால், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் கணேசன், நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியா் ரசியாபேகம், ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் பத்மா, வட்ட வழங்கல் அலுவலா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.