மன்னாா்குடி அருகே மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக, நண்பரை அரிவாளால் வெட்டியவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
கோட்டூா் மேலப்பனையூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜப்பாா் மகன் சம்சுதீன்(34). நடுத்தெருவைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் பிரபு (38). இருவரும் நண்பா்கள். இவா்கள், செவ்வாய்க்கிழமை ஒன்றாக மதுகுடித்துள்ளனா். அப்போது, பிரபு, சம்சுதீனை தகாத வாா்த்தைகளால் பேசியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரிந்து சென்றுவிட்டனா்.
அன்று இரவு சம்சுதீன் அரிவாளை எடுத்துக்கொண்டு பிரபு வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, அவரிடமிருந்து அரிவாளை பிடுங்கிய பிரபு, சம்சுதீனை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதில், காயமடைந்த சம்சுதீனை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து கோட்டூா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய பிரபுவை புதன்கிழமை கைதுசெய்தனா்.