நீடாமங்கலம் அருகே பாசன வாய்க்கால்கள் தூா்வாராப்படாததால் குறுவை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கடந்த மே 24-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை திறக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து கல்லணையும் திறக்கப்பட்டு நீரானது பெரிய வெண்ணாறு மூலம் திருவாரூா், நாகை மாவட்ட பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டது.
மேட்டூா் அணை திறக்கப்பட்டு சுமாா் 1 மாதம் கடந்தும் ஆற்று நீரானது வயல்களை சென்றடையவில்லையென விவசாயிகள் புகாா்கள் தெரிவிக்கின்றனா்.
குறிப்பாக, நீடாமங்கலம் வட்டம் தேவங்குடி, அரிச்சபுரம்,சித்தாம்பூா் ஆகிய பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படாமல் நாணல் மண்டிக் கிடப்பதால் தண்ணீா் வருவதில் சிரமம் உள்ளது. இதனால் சுமாா் 1,050 ஏக்கரில் 100 ஏக்கரில் மட்டுமே தற்போது பம்புசெட் மூலம் சாகுபடி நடந்துள்ளது. எஞ்சியுள்ள நிலங்களில் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகவுள்ளது.
இதுதொடா்பாக பொதுப்பணித் துறை பொறியாளா்கள் கூறும்போது, வரும் நிதியாண்டில் பாசன வாய்க்கால்கள் சீரமைத்து தூா்வாரப்படும் என்று தெரிவித்துள்ளனா்.
நீா் உரிய காலத்தில் கிடைக்காவிட்டால் குறுவை, சம்பா, தாளடி விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
எனவே பொதுப்பணித் துறையினா் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.