நெல் குவிண்டாலுக்கு ரூ. 2500 வழங்க தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் குறுவை தொகுப்புத் திட்டத்திற்கு மட்டுமே உர விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகளின் தேவைக்கேற்ப உர விற்பனை நடைபெறவில்லை.
இதனால், குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கு உரம் கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா். எனவே, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரங்களை உடனடியாக விநியோகம் செய்யவேண்டும்.
குறுவை பயிருக்கு தனி காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்கப்படும் என தோ்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். உற்பத்திச் செலவு கூடியுள்ள நிலையில், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 வழங்குவதற்கான அறிவிப்பை உடனடியாக அமைச்சரவை கூட்டத்தில் வெளியிட வேண்டும் என்றாா்.