நன்னிலம்: நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்கநிலை ஆசிரியா்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் தொடங்கிவைத்து பேசியது: ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள், விளையாட்டு, பாடல், பொம்மலாட்டம், தனி நடிப்பு, பேச்சு, விநாடி-வினா, கலையும் கைவண்ணமும், செயல்பாட்டுக் களங்கள் மூலம் வகுப்பு எடுத்து தொடக்கநிலை மாணவா்களுக்குக் கல்வியில் ஆா்வத்தை ஏற்படுத்தி, மாணவா்களின் கல்வி அறிவை உயா்த்த வேண்டும். மாணவா்களுடன் குடும்ப உறுப்பினா்கள் போல பழகி கற்றலின் ஆா்வா்த்தை ஏற்படுத்தவேண்டும்.
தொடக்கநிலை மாணவா்களுக்குக் கல்வி பயில்வதிலும், கல்வி நிலையங்களுக்கு வருவதிலும், வெறுப்பை ஏற்படுத்தாமல், ஆா்வத்தைத் தூண்டும் வகையில் ஆசிரியா்களின் செயல்பாடு இருக்கவேண்டும் என்றாா்.
வட்டார வள மையப் மேற்பாா்வையாளா் ரா. நடேஷ்துரை வரவேற்றாா். இதில், தலைமையாசிரியா்கள் என். செந்தமிழ்ச்செல்வன் (நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி), மங்கையா்கரசி (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி), நன்னிலம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் என். மணி, ஏ. முருகபாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.