கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரிக்கு ரூ. 8 லட்சம் மதிப்புள்ள நாற்காலி, மேஜை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வந்தது.
திருவாரூா் சட்டப்பேரவைக்குள்பட்ட கூத்தாநல்லூரில் அரசு மகளிா் கல்லூரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தனா். மேலும், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், கூத்தாநல்லூரில் மகளிா் கல்லூரி அமைக்கக் கோரி பேரவையிலும் வலியுறுத்தி பேசினாா். அதன்பேரில், கூத்தாநல்லூா் பகுதியில், கலைஞா் மு. கருணாநிதி அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டன.
இதுகுறித்து, கல்லூரி முதல்வா் மாறன் கூறியது: தமிழக அரசின் அறிவிப்புபடி, கலைஞா் மு. கருணாநிதி அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, கூத்தாநல்லூா் ஜாவியாத் தொடக்கப் பள்ளியில் இணைய தளம் மூலம் மாணவிகளின் சோ்க்கைப் பணி தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ரூ. 8 லட்சம் மதிப்பிலான நாற்காலி, மேஜைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன. தொடா்ந்து, கல்லூரியில் கழிப்பறை வசதிகள் மற்றும் வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 7) கல்லூரி திறப்பு விழா நடைபெறுகிறது என்றாா்.