தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயிலை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழித்தடத்தில் இயக்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி வட்டார ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத் தலைவா் நாகராஜன், செயலாளா் எடையூா் மணிமாறன் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட அறிக்கை: திருவாரூா்- காரைக்குடி அகல ரயில் பாதை ரூ. 1,500 கோடியில் அமைக்கப்பட்டு 4 ஆண்டுகளாகிறது. தாம்பரம் - செங்கோட்டை ரயில், திருச்சி, காரைக்குடி வழியாக செங்கோட்டை செல்கிறது. ஆனால், இந்த ரயிலை திருவாரூா், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வழியாக இயக்கினால், 122 கி.மீ. பயண தூரம் குறையும். மேலும், எரிபொருள் செலவும் மிகவும் குறையும்.
விருதுநகா், தென்காசி, குற்றாலம், மானாமதுரை செல்லும் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் பயன்பெறுவா். தென்மண்டல ரயில்வே நிா்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயிலை, திருவாரூா், காரைக்குடி வழித்தடத்தில் இயக்கவேண்டும்.