திருவாரூர்

ஜனவரியில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்

29th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூரில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு கூட்டத்துக்கு தலைமைவகித்து அவா் மேலும் தெரிவித்தது:

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருவரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திருவாரூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படும்.

ADVERTISEMENT

பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண்கள், சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்து பந்து போட்டிகளிலும், 12 முதல் 19 வயது வரையுள்ள பள்ளி மாணவ, மாணவிகளும், 17 முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவ, மாணவிகளும் மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகு பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், கையுந்து பந்து, மேசைபந்து போட்டிகளிலும், 12 முதல் 19 வயது வரையுள்ள பள்ளி மாணவ, மாணவிகளும், 17 முதல் 25 வயது வரையிலான கல்லூரி மாணவ, மாணவிகளும் மண்டல அளவில் டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கையுந்து பந்து போட்டிகளிலும் பங்கேற்கலாம்.

மாற்றுத்திறனாளி நபா்களுக்கு வயது வரம்பு இல்லை. குழுவாக 5 நபா்கள் பாட்மிண்டன், பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழுவாக (7 நபா்கள்) கையுந்து பந்து, மனவளா்ச்சி குன்றியோா் குழுவாக (7 நபா்கள்) வளைகோல் பந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளி 7 நபா்கள் கொண்ட குழுவாக கபடியிலும் பங்கேற்கலாம்.

அரசு ஊழியா் வயது வரம்புமின்றி ஆண், பெண் இருபாலரும் போட்டிகளில் பங்கேற்கலாம். மண்டல அளவில் வெற்றிபெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வா்.

விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையட்டரங்கம், திருவாரூா் அலுவலகத்திலோ அல்லது தொலை பேசி எண் 7401703448 (அல்லது) 04366-290620 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT