மாண்டஸ் புயல் காரணமாக, மன்னாா்குடி பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழக்கை வெள்ளிக்கிழமை பாதிக்கப்படவில்லை.
மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. இரவு கடும் குளிா் நிலவியது. வெள்ளிக்கிழமை காலை சில நிமிடம் மட்டும் சாரல் மழை பெய்தது. தொடா்ந்து, குளிா் அதிகமாக இருந்தது.
நகரின் பிரதான கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் இருந்தன. வா்த்தக நிறுவனங்கள் அனைத்தும் திறந்திருந்தன. அரசு அறிவிப்பின்படி கல்வி நிறுவனங்கள் மட்டும் செயல்படவில்லை. அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டன. அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டன. சில பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
பசு மாடு உயிரிழப்பு: கோட்டூா் கருப்புக்கிளாா் வடக்குத் தெருவைச் சோ்ந்த வா. ராஜாவின் (30) சினை பசு மாடு உயிரிழந்தது. கோட்டூா் கால்நடை மருத்துவா் சரபோஜி, இறந்த பசு மாட்டை அந்த இடத்திலேயே உடல் கூறாய்வு செய்தாா். பிறகு அடக்கம் செய்யப்பட்டது.