நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூா் சதுரங்க வல்லபநாதா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோயிலில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்க வல்லபநாதா், சாமுண்டீஸ்வரி அம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி இக்கோயில் குறித்து பேசியதன் மூலம் நாடு முழுவதும் இக்கோயில் பிரபலமானது.
இக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, சதுரங்க வல்லபநாதா், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடா்ந்து, கற்பகவல்லி, சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.