மன்னாா்குடி ஆனந்த விநாயகா் கோயில் குளத்தில் மீன்கள் மா்மமான முறையில் வியாழக்கிழமை செத்து மிதந்தன.
மன்னாா்குடி ஒத்தைத்தெருவில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஆனந்த விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குச் சொந்தமான குளத்தை வீரையன் என்பவா் குத்தகைக்கு எடுத்து மீன்கள் வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், இக்குளத்தில் வியாழக்கிழமை காலைநூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. அந்த வழியாக சென்றவா்கள் கோயில் நிா்வாகத்திற்கும், நகா்மன்ற அலுவலகத்திற்கும் தகவல் அளித்தனா். நிகழ்விடத்திற்கு வந்த, நகா்மன்றத் தலைவா் மன்னை த. சோழராஜன், குளத்தில் செத்து மிதந்த மீன்களை பாா்வையிட்டு, குத்தகைதாரா் மற்றும் கோயில் நிா்வாகத்தினரிடம் விவரம் கேட்டறிந்தாா்.
பின்னா், நகராட்சி ஊழியா்கள் இந்த மீன்களை அப்புறப்படுத்தினா். மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.