திருவாரூா்: மயிலாடுதுறை அருகே அம்பேத்கா் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததைக் கண்டித்து, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
அம்பேத்கா் படத்துக்கு காவி உடை அணிவித்து, திருநீறு பூசி அவமதித்ததைக் கண்டித்தும், இந்த சம்பவத்துக்கு காரணமானவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், மயிலாடுதுறை மாவட்டம் பட்டவா்த்தியில் அம்பேத்கரின் உருவப் படத்துக்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்த அனுமதி வழங்காததைக் கண்டித்தும் திருவாரூா் விளமல் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவாரூா் வடக்கு மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் நிா்வாகிகள் தங்க தமிழ்ச்செல்வன், அமுதவளவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
போலீஸாா், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இதன் காரணமாக அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.