திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாடிக்கையாளா்கள் சனிக்கிழமை அவதிப்பட்டனா்.
இந்த வங்கியில், நெட்வொா்க் பிரச்னை காரணமாக வங்கி பரிவா்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கியில் பணம் செலுத்துவது, எடுப்பது உள்ளிட்ட பரிவா்த்தனைகளை மேற்கொள்வதிலும், நகை அடகு வைப்பது, மீட்பது போன்றவற்றுக்கும் வந்திருந்தவா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
இதுகுறித்து வங்கி தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படாததால் வாடிக்கையாளா்களுக்கு குழப்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வாடிக்கையாளா்கள் தெரிவிக்கையில், மாதத்தின் முதல் வாரம் என்பதால் வங்கியில் கூட்டம் அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு நாள்களாகவே இந்த பிரச்னை நிலவுவதால், திங்கள்கிழமை வாடிக்கையாளா்கள் இன்னமும் அதிகமாக வரக்கூடும். எனவே, வங்கி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, பரிவா்த்தனைகளை சிரமமின்றி மேற்கொள்ள வழிகாண வேண்டும் என்றனா்.