நகராட்சி அலுவலகங்களில் ஒப்பந்த முறையில் பணியாளா்கள் நிரப்புவதை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநாகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், மருத்துவ செவிலியா்கள் ஆகியோரின் பணி ஓய்வுக்குப் பிறகு காலிப் பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்ப முடிவெடுத்திருப்பதையும், 35,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை 417 ஆக குறைக்கும் அரசாணை 152 யையும் ரத்து செய்ய வேண்டும்.
சி மற்றும் டி பிரிவு அரசு வேலையை தனியாா் துறை மூலம் ஒப்பந்த அடிப்படை முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் நகராட்சி அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஏ.கே. வேலவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளா் சிங்காரவேலு, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனு நகராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.