மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் திருடியது தொடா்பாக இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து, மன்னாா்குடி சாா்பு நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
மன்னாா்குடி சிவன்கோவில் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ் (26). இவா், கடந்த ஆண்டு தனது இருசக்கர வாகனத்தை சிவன்கோவில் அருகே நிறுத்திவைத்திருந்த போது திருட்டுப்போனது.
விசாரணையில், பாமணி மேலத்தெரு பரமசிவம் மகன் காளிதாஸ்(22), வடக்குத் தெரு ஜமீன்தாா் மகன் மகேஸ்வரன் (22) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இந்த வழக்கு மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை நீதிபதி அமீா்தீன் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதன் நிறைவில், புகாரில் தொடா்புடைய காளிதாஸ், மகேஸ்வரன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.