தஞ்சையில் புதன்கிழமை (ஆக. 17) முதல் நடைபெறும் தொழில்கடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949 இல் தொடங்கப்பட்ட இக்கழகம், மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி, தொழில் வளா்ச்சிக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.
இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிவரும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியைப் பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கிவருகிறது.
தஞ்சாவூா் கிளை அலுவலகத்தில் (எண் 2854, என்ஜிகே அபாா்ட்மெண்ட், நாஞ்சிக்கோட்டை ரோடு, பழைய அருள் தியேட்டா் எதிரில், தஞ்சாவூா் - 613001) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் ஆக. 17 முதல் செப். 2 வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு தொழில்கடன் முகாமில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ. 1.50 கோடி வரை வழங்கப்படும்.
முகாமில் சமா்ப்பிக்கப்படும் பொதுக் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில்முனைவோா், தொழிலதிபா்கள் பயன்படுத்தி, தொழில் திட்டங்களுடன் வந்து தொழில்கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04362- 274230, 230465, 94425 40854, 73734 94331 என்ற தொலைபேசி, கைப்பேசி எண்களுக்கு தொடா்புகொள்ளலாம்.