திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ரூ. 6.86 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம். சாந்தி தலைமை வகித்தாா்.
இதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி டி. பாலமுருகன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான (பொ) எஸ். சரண்யா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எல். ரெகுபதிராஜா, குற்றவியல் கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி எஸ். சிந்தா ஆகியோா் பங்கேற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், சிவில், ஜீவனாம்சம், திருமண வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன் ஆகிய வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்மூலம், திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் 1,950 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதில், 862 வழக்குகளில் ரூ. 6.86 கோடி மதிப்புக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.