கூத்தாநல்லூா் மகாமாரியம்மன் கோயிலில் 33- ஆம் ஆண்டு பால்காவடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
லெட்சுமாங்குடி வெண்ணாற்றங்கரை கோவிந்தசாமி காலனியில் அமைந்துள்ள இக்கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில், பால் காவடியும், கிடா வெட்டு பூஜையும் நடைபெறும்.
அதன்படி, பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை பால்காவடி எடுத்து, முக்கிய வீதிகளின் வழியாக கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து, ஆட்டுக்கிடா வெட்டி, பூஜை நடைபெற்றது.
முன்னதாக, மகாமாரியம்மனுக்கு பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காட்டு நாயக்கன் தெருவாசிகள் செய்திருந்தனா்.