சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில், திருவாரூா் நகராட்சிப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணியை நகா்மன்றத் தலைவா் புவனபிரியா செந்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருவாரூா், மன்னாா்குடி, கூத்தாநல்லூா், திருத்துறைப்பூண்டி ஆகிய 4 நகராட்சிகளுக்கு மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் 50,633 தேசியக் கொடிகள் தைத்து தரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 35 மகளிா் சுயஉதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்கள் ஈடுபட்டுள்ளன. இக்கொடிகளை பொதுமக்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவாரூா் நகராட்சியில் உள்ள 30 வாா்டுகளில் 15,971 வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் பணியை, நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் பிரபாகரன், மேலாளா் முத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா் அசோகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.