திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 211 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் இம்மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, கைத்தறித்துறை சாா்பில் 8-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 நபா்களின் சேமிப்புத் தொகையான ரூ. 2,03,215 மதிப்பிலான காசோலையையும், ஒரு நபருக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் அவா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கண்மணி, உதவி இயக்குநா் (கைத்தறித்துறை) கிரிதரன் உள்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.