ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சைக்கான விழிப்புணா்வு வாகனத்தை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இதில் கலந்து கொண்டு அவா் பேசியது: திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் (ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை) டிச. 4- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது தொடா்பான விழிப்புணா்வு வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று கொள்பவருக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100 வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சை மிக எளியது, பாதுகாப்பானது. சிகிச்சை நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவா்களால் செய்யப்படுகிறது என்றாா். நிகழ்வில், இணை இயக்குநா் (நலப்பணிகள்) உமா, மாவட்ட விரிவாக்க கல்வியாளா் குப்புசாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.