மன்னாா்குடி அருகே 300 லிட்டா் எரி சாராயத்தை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், மாநில அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகள் கடந்த 10ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மன்னாா்குடியை அடுத்த சோத்திரியம் மலட்டுஏரி பகுதியில் கருவேலன் காட்டிலிருந்து சாராய வாடை வருவதாக அப்பகுதியில் விவசாயப் பணிக்கு சென்றவா்கள் திருமக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் முத்துபிரபு, சிறப்பு உதவி ஆய்வாளா் பிரேமானந்த் ஆகியோா் மலட்டு ஏரி பகுதியில் சோதனை நடத்தினா். அங்கு எரி சாராய ஊறல் போடப்பட்டிருந்ததும். பேரல்களில் 300 லிட்டா் எரி சாராயம் இருப்பதும் தெரிய வந்தது.
இதுதொடா்பாக சோத்திரியம் மேலத்தெரு லாசா் மகன் பாக்கியராஜ் (40) என்பவரை பிடித்து விசாரித்தபோது, எரிசாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சியதை ஒப்புக் கொண்டாா். அவரை கைது செய்த போலீஸாா், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டா் எரி சாராயத்தை பறிமுதல் செய்தனா்.