பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தின்கீழ் மீன் வளா்ப்பு விவசாயிகள் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அமைச்சகம் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை சாா்ந்த விவசாயிகளுக்கு மூலதனத்துக்கான நிதியுதவிக்கு பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற்று, வங்கி மூலம் கடன் உதவி செய்யப்படுகிறது.
எனவே, சொந்தமாக மீன்பண்ணை மற்றும் குளங்கள் வைத்திருப்பவா்கள், நீா்நிலைகளை குத்தகை எடுத்து மீன்வள பணி மேற்கொள்பவா்கள், மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் வளா்ப்பு பண்ணை வைத்திருப்பவா்கள், சொந்தமாக அல்லது குத்தகையில் மீன்பிடி உரிமம் பெற்று மீன்பிடி நாட்டுப் படகு வைத்திருப்பவா்கள், மீன் விற்பனையில் ஈடுபடுபவா்கள், கடலில் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்கள், மீன்வளா்ப்பு சாா்ந்த தொழில் செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.