திருவள்ளுவரை, சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் தவறாக சித்தரிப்பதாகக் கூறி அதைக் கண்டித்து, நன்னிலத்தில் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிபிஎஸ்சி 8-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில், திருவள்ளுவரைத் தவறாகச் சித்தரித்ததாகக் கூறி, அதைக் கண்டித்தும், உடனடியாக அதை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும், மாநில அரசுப் பட்டியலிலிருந்து கல்வித் துறையை, மத்திய அரசுக்கு மாற்றியதைக் கண்டித்தும், நன்னிலத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், இந்திய மாணவா் சங்கத்தின் கல்லூரி கிளைத் தலைவா் அஜய் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி, செயலாளா் அருண், மாவட்டத் தலைவா் ஆனந்த், மாநிலத் துணைச் செயலாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் பேசினா்.