திருவாரூர்

கூத்தாநல்லூர் : பொதக்குடியில் சந்தனக்கூடு ஊர்வலம்

22nd Dec 2021 05:13 PM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடியில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

பொதக்குடியில் ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில், சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, 12 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, பூலாங்கொடி ஏற்றமும், பெரிய மினார் கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து, 21 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை இரவு, 9.35 சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது.

தர்ஹாவில், மின்சார விளக்குகளால் சந்தனக் கூடு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மின்சார சந்தனக் கூட்டை, தர்ஹா முன்பு நிறுத்தப்பட்டு ஓதப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொரடாச்சேரி - லட்சுமாங்குடி பிரதானச் சாலை மற்றும் பொதக்குடி முக்கிய வீதிகள் வழியாக, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  சந்தனக் கூடு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

ADVERTISEMENT

வழி நெடுகிலும் இஸ்லாமியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர்கள் என ஏராளமானவர்கள் சந்தனத்தைப் பூசியும், பூக்களைத் தூவியும் வணங்கினர்.சந்தனக் கூடு ஊர்வலத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், மன்னார்குடி கோட்டாட்சியர் டி.அழகர்சாமி, நீடாமங்கலம் ஒன்றியப் பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், வாழாச்சேரி மதர் இந்தியா பப்ளிக் பள்ளி தாளாளர் வி.ஆர்.என். பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சந்தனக் கூடு ஏற்பாடுகளை,ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்க நிர்வாகிகள், சந்தனக்கூடு உத்சவக்குழு, தர்ஹா பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கவனித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT