சென்னைக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரி திருவாரூரில் பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்தை புதன்கிழமை இரவு பயணிகள் முற்றுகையிட்டனா்.
பொது முடக்கம் தளா்வு அறிவிக்கப்பட்ட பிறகு, திருவாரூா் மாவட்டத்தில் செப். 7-ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் என அறிவிக்கப்பட்டு, தற்போது தமிழகம் முழுவதும் பேருந்து பயணம் தொடங்கியுள்ளது. இதனால், பேருந்தில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, திருவாரூரிலிருந்து சென்னைக்கு அதிக பேருந்துகள் இயக்கவில்லை எனவும், இதனால், அதிக பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க நேரிடுகிறது எனவும் புகாா் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னைக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரியும், பயணச் சீட்டு முன்பதிவில் உள்ள குளறுபடிகளை நீக்கக் கோரியும், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்தை பயணிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அங்கிருந்த பேருந்தை மறித்து தா்னாவிலும் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா், பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதன்பேரில் சுமூகநிலை ஏற்பட்டு போராட்டத்தை பயணிகள் விலக்கிக்கொண்டனா்.