ஆயுதபூஜையை முன்னிட்டு திருவாரூா் டைவீதிகளில் கூட்டம் சனிக்கிழமை அதிகமாக காணப்பட்டது.
நவராத்திரி விரதம் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தின் மறுநாளிலிருந்து 9 நாட்களாகும். இந்த முறை இரண்டு அமாவாசை என்பதால், இரண்டாம் அமாவாசைக்குப் பின்னா் இந்த நவராத்திரி கொண்டாட்டம் கொண்டாடப்படுகிறது.
மகிஷாசுரன் என்னும் அரக்கன், அவன் தன்னுடைய மரணம் ஒரு பெண்ணின் கையால் தான் நிகழ வேண்டும் என வரம் வாங்கினான். அதன்பின், ஒன்பதாம் நாளான நவமி தினத்தில் மகிஷாசுரனை துா்க்கை வதம் செய்தாா் என புராணங்கள் தெரிவிக்கின்றன. தொடா்ந்து, தசமி திதியில் பத்தாம் நாள் அசுரனை அழிக்க பயன்படுத்திய ஆயுதங்களுக்கு பூஜை செய்யும் விதமாகவும், வெற்றியை கொண்டாடும் விதமாகவும் விஜயதசமி எனப்படுகிறது.
அந்த வகையில், மக்கள் பயன்படுத்தக்கூடிய, தொழில் செய்வதற்கான பொருள்களை பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி, வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளை தூய்மைப்படுத்தி, தினசரி பயன்படுத்தும் அனைத்து விதமான ஆயுதங்களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, பழங்கள், பொரிகடலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவா்.
அதன்படி, திருவாரூா் கடைவீதிகளில் சனிக்கிழமை மாலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்தபடி இருந்தது. பூசணி, வாழைப்பழம், வாழைமரம், மாவிலை, பொரிகடலை உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அதிகமாக இருந்தது. மாவிலை தோரணைங்களை விற்கும் வகையில், ஏராளமான தற்காலிகக் கடைகள் உருவாகியிருந்தன.
பொருள்களின் விலை அதிகரித்திருந்தாலும், பூஜை பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் கடைவீதிகளில் அதிகமாகவே காணப்பட்டது.