திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்குவதற்கான நோ்முகத்தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். தசை சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயலிழந்த 63 மாற்றுத் திறனாளிகள் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் (பாட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள்) வழங்கும் வகையில் இந்த நோ்முகத் தோ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.சந்திரமோகன், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவா் திருச்செல்வி, முடநீக்க வல்லுநா் ரேகா, இயன்முறை தசை பயிற்சியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.