திருவாரூா் மாவட்டத்தில், மக்களை பாதிக்காத வகையில் கரோனா சிறப்பு மையங்களை அதிகப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தது:
உலகம் முழுவதும் 175 நாடுகளில் பரவியிருக்கும் கரோனா தொற்றால் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவில் முதலில் கோரத் தாண்டவம் ஆடிய கரோனாவின் பரவும் வேகம், தற்போது குறைந்துள்ளது என்று வரும் செய்திகள் ஆறுதல் அளிப்பதாக உள்ளன. தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவும், மத்திய அரசின் மக்கள் ஊரடங்கு உத்தரவும் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கான கரோனா சிறப்பு மையங்களுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். அதோடு திருவாரூா் மாவட்டத்தில் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிறப்பு மையங்களை அமைக்க வேண்டும். இந்த மையங்கள் மக்களை பாதிக்காத வகையில், மற்ற சிகிச்சைகளுக்கு மக்கள் வந்து செல்லும் வகையில் பாதுகாப்பான இடங்களில் அமைக்க வேண்டும் என்றாா்.
இதேபோல், பேரளத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஐ.வி.நாகராஜன் பேசுகையில், கரோனா நிவாரண விநியோகித்தில், டோக்கன் வழங்குவதை விடுத்து ரேஷன் கடைப் பணியாளா்களைக் கொண்டு நிவாரணத் தொகையையும், நிவாரணப் பொருட்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்கலாம். இதுதான் 144 தடை உத்தரவு கட்டுப்பாடுகளை ஓரளவாவது கடைப்பிடிக்க உதவும் என்றாா்.