மன்னாா்குடி அருகே ஓஎன்ஜிசி நிறுவனனத்துக்குச் சொந்தமான தொழிலாளா்களை ஏற்றி வந்த வானங்களை போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை மறிக்க முயன்றனா்.
மன்னாா்குடி அருகே கோட்டூா் சோழங்கநல்லூரியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சாா்பில், ஆழ்துளைக் கிணறு அமைத்து, பூமிக்கடியில் எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் எண்ணெய் எடுக்கும் பணி இல்லை என்று கூறப்படுகிறது.
எனவே, அரசின் உத்தரவை மீறி எண்ணெய் எடுக்கும் பணியை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகக் கூறி, சோழங்கநல்லூா் போராட்டக்குழுத் தலைவா் ராஜ்பாலன் தலைமையில், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வேலை ஆள்களை ஏற்றி வரும் வாகனங்களை மறிக்கும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.
அதன்படி, ஓஎன்ஜிசி செல்லும் சாலையில் கூடியிருந்த ராஜ்பாலன் உள்ளிட்ட போராட்டக்குழுவினருடன், திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிசாமி, திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளா் அன்பழகன், கோட்டூா் காவல் ஆய்வாளா் அறிவழகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, ஊரடங்கிலிருந்து ஓஎன்ஜிசி சாா்பில் எண்ணெய் எடுப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதற்கான மத்திய அரசின் கடித நகலைக் காட்டினா்.
இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் பேசியபின், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.