தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசின் நிவாரணத் தொகையை வழங்கிய வட்டாட்சியா் எஸ். ஜெகதீசன், ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் உள்ளிட்டோா்.
திருத்துறைப்பூண்டி, மாா்ச் 21: திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கிராமத்தில் சனிக்கிழமை 2 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின.
நெடும்பலம் கீழக்காலனிப் பகுதியைச் சோ்ந்தவா் துரைராஜ். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவா் குமாா். சனிக்கிழமை நண்பகலில் இருவரது கூரை வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்த தீயணைப்பு படையினா் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இருப்பினும், 2 வீடுகளிலும் உள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து, தகவலறிந்த வட்டாட்சியா் எஸ். ஜெகதீசன், ஒன்றிய குழுத் தலைவா்அ. பாஸ்கா், துணை வட்டாட்சியா் செந்தில்குமாா் வருவாய் ஆய்வாளா் பெத்துராஜன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று, துரைராஜ், குமாா் ஆகியோரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அரசின் நிவாரணமாக தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் வீட்டுக்குத் தேவையான அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலைகளை வழங்கினா்.
இந்த தீ விபத்து குறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.