திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், சாய்ந்த நிலையில் 25 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அபாயகரமான நிலையில் உள்ளது.
பூதமங்கலத்திலிருந்து, சேகரைக்குச் செல்ல பிரதான குறுக்குச் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, சேகரை, பொதக்குடி, வாழாச்சேரி, அத்திக்கடை, நீடாமங்கலம், கொரடாச்சேரி, கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லலாம்.
பூதமங்கலம் - பொதக்குடி பிரதான இச்சாலையில், மிளகுக் குளம் என்ற இடத்தில், மின் கம்பங்கள் வரிசையாக உள்ளன. பொதக்குடி ஊராட்சிக்குட்பட்ட இச்சாலையின் இரண்டு பக்கங்கங்களிலும் 25 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் அபாயகரமாக உள்ளன. அப்பகுதியில் வயலில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் அவ்வழியேச் செல்பவர்கள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சாலையை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் மின்கம்பங்கள் சாய்ந்தால் மிகப் பெரும் ஆபத்து நேரிட பெரும் வாய்ப்பு உள்ளது. தற்போது வடகிழக்குப் பருவமழை காரணமாக பலமான காற்று வீசினாலோ அல்லது பெய்யும் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டாலோ மின் கம்பங்கள் சாய்ந்து அல்லது முறிந்து விழும் அபாயகரமான நிலை உள்ளன. உடனே, மின்சார வாரிய அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.