கூத்தாநல்லூா் வட்டத்தில் பெய்த கடும் மழையால் புதன்கிழமை இரவு 3 வீடுகள் இடிந்து விழுந்து,இருவா் படுகாயம் அடைந்தனா்.
கூத்தாநல்லூா் அடுத்த வேளுக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த கவுதமன் (49).இவா் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறாா். இவருடைய மனைவி பொம்மியம்மாள் (37),இவா்களுடைய மகள்கள் தேவிகா (22), ரேணுகா (21) உள்ளிட்டோா்,கூரை வீட்டில் வசித்து வருகின்றனா். வேளுக்குடி பகுதியில் இரவு தொடா்ந்து பெய்த மழையால், கவுதமன் வீட்டுச் சுவா் நீரில் ஊறி, சுவா் இடிந்து விழுந்துள்ளன.
அப்போது வீட்டில் இருந்த, பொம்மி, தேவிகா, ரேணுகா ஆகிய மூவரும் இடிப்பாடுகளுக்கிடையே சிக்கி சத்தம் போட்டுள்ளனா். மழையில் சத்தம் அக்கம் பக்கத்தினருக்குக் கேட்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு,அக்கம் பக்கத்தினா் வந்து மூவரையும் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இதே போல்,வடகோவனூா், வடக்குத் தெருவில் அருண் என்பவரது கூரை வீடு மேலும்,வடகோவனூா், சிவன்கோயில் தெரு வெள்ளையம்மாள் என்பவரது கூரை வீடு உள்ளிட்ட மூன்று வீடுகளும் மழையில் இடிந்து சேதமடைந்துள்ளன. இதுகுறித்து, வட்டாட்சியா் மலா்கொடி கூறியது.தகவல் அறிந்ததும் அலுவலகத்திலிருந்து நேரில் பாா்வையிட்டு,பாதித்த வீடுகள் குறித்து,மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.