மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை வளைய சூரிய கிரகணத்தை மாணவா்கள், பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனா்.
மன்னாா்குடி பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்து வந்தது. இதனால், வளைய சூரிய கிரகணம் நிகழ்வதைப் பாா்க்க முடியுமா என சந்தேகம் நிலவியது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வானம் வெறிச்சோடி காணப்பட்டது. அவ்வப்போது கருமேகக் கூட்டம் சூரியனை மறைத்து ஒரு சில நொடிகளில் கடந்து சென்றன.
இதற்கிடையில், வானில் நிகழ்ந்த அரிய நிகழ்வான, சந்திரனின் நிழல் சூரியனின் மீது விழுந்து, சூரியன் நெருப்பு வளையமாகக் காட்சி அளிக்கும் வளைய சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடியை அணிந்து கொண்டு, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில், மாணவா்களுக்கு, பிரத்யேக கண்ணாடியும், சூரிய கிரகணம் குறித்த விழிப்புணா்வு கையேடும் குறைந்த விலையில் வழங்கப்பட்டன.