திருவாரூர் மாவட்ட இசைப் பள்ளியில் கோடைகால கலைப் பயிற்சி முகாம் மே 1-ஆம் தேதி தொடங்குகிறது என கலைப் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை மற்றும் தஞ்சாவூர் மண்டலக் கலைப் பண்பாட்டு மையம் சார்பில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், யோகா, கராத்தே, சிலம்பம் போன்ற கலைப் பயிற்சிகளை 5 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சியளித்து வருகிறது.
அந்த வகையில் 2019-2020 ஆண்டுக்கான கோடை விடுமுறையில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் (வாசன் நகர்) இப்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சியில் குரலிசை, பரத நாட்டியம், யோகா, ஓவியம், கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளில் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. மே 1 முதல் 10-ஆம் தேதி வரை காலை 9 முதல் மதியம் 12 மணி வரை பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில், சேர விரும்புவோர் மே 1-ஆம் தேதி காலை 9 மணியளவில் திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.