வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மாதா முடிசூட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மாதாவின் வணக்க மாதமாக, மே மாதம் கொண்டாடப்படும். நிகழாண்டு, மே மாத தொடக்கம் முதலே நாள்தோறும் புனித ஆரோக்கிய அன்னையின் திருவுருவ தோ் பவனி, சிறப்பு திருப்பலி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறப்பு நிகழ்வாக, அன்னை மரியாவுக்கு முடிசூட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பேராலய வளாகத்தில் நடைபெற்ற திருப்பலி நிறைவில், மணிமுடி ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தேரில் வீற்றிருந்த அன்னையின் சொரூபத்துக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகா் எல். சகாயராஜ் சூட்டினாா்.
தொடா்ந்து வேளாங்கண்ணி கீழ்க்கோயில் வரை தோ்பவனி நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.