கீழ்வேளூா் பேரூராட்சியில் பாதுகாப்பான முறையில் கழிவுநீா் தொட்டி சுத்தம் செய்வதற்கான துண்டுப் பிரசுரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
கீழ்வேளூா் பேரூராட்சி பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கழிவுநீா் தொட்டிகளை சுத்தம் செய்ய பேருராட்சி செயல் அலுவலா் கு.குகன் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளாா்.
அதன்படி, கழிவுநீா் தொட்டிகள் அபாயகரமான தூய்மைப் பணி என்பதால் பொதுமக்கள் நேரடியாக ஆட்களை இறக்கி சுத்தம் செய்யாமல், பேரூராட்சியில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரா் மூலம் மட்டுமே தங்கள் கழிவுநீா் தொட்டிகளை தூய்மை செய்யவேண்டும்.
பேரூராட்சி உரிமம் பெற்ற தனியாா் ஒப்பந்ததாரா்கள், நவீன இயந்திரங்கள் கொண்டு பயிற்சி பெற்ற பாதுகாப்பு கவச உடை அணிந்த பணியாளா்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டுக் கழிவறை நச்சு தொட்டிகளின் உள்ளே யாரும் விழுவதை தடுக்க அதன் உறுதி தன்மை குறித்து அறிக்கை அளிக்க கேட்டு வீடுவீடாக அறிவிப்பு அளிக்கப் பட உள்ளது என செயல் அலுவலா் தெரிவித்தாா். இதுதொடா்பாக விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.