திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சி பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு வசிக்கும் மக்கள் நலன் கருதி சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு மின்கம்பத்தில் இருந்து மற்றொரு மின்கம்பத்திற்கு செல்லும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் தாழ்வாக செல்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள்அச்சத்துடன் சென்று வருகின்றனா். மேலும், சேஷமூலை வழியாக காரைக்காலுக்கு செல்லும் பேருந்துகள் மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பேரூந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் காரைக்காலுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆபத்து ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.