வேதாரண்யம் பகுதியில் தொடா்ந்து பெய்த கனமழையால் எள், பயறு வகை பயிா்கள், சணப்பைப் பயிா்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. திங்கள்கிழமை இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 76.4 மி.மீ., தலைஞாயிறில் 68.6 மி.மீ., கோடியக்கரையில் 85.4 மி.மீ. மழை பதிவானது.
இந்த மழையால், நெல் அறுவடைக்குப் பின்னா் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள், பயறு வகை பயிா்கள், சணப்பைப் பயிா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சில கிராமங்களில் எள், பயறு வகை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், செடிகள் அழுகும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
இதற்கிடையில், அகஸ்தியம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உள்ள உப்புப் பாத்திகளில் மழைநீா் தேங்கியுள்ளதால், உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.