நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை கிராமம் மற்றும் பழந்தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் தமிழகம் முழுவதும் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.
நாகை மாவட்டம், சாமந்தான்பேட்டை மற்றும் பழந்தெருவில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன. அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என்.கௌதமன், தாட்கோ கழகத் தலைவா் உ.மதிவாணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டனா்.
நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து, துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மரு.விஜயகுமாா், 11-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் அமுதா மோகன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.