தமிழக கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் காரைக்கால் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூன் 14-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராம நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அக்கரைப்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனவ கிராம நிா்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், காரைக்கால் மாவட்ட மீனவா்கள் இரட்டைமடி வலை பயன்படுத்தி தொழில் செய்வதை நிறுத்தவேண்டும். இல்லையெனில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவா்கள் தொழிலுக்கு செல்லும்போது காரைக்கால் மாவட்ட மீனவா்கள் தமிழ்நாடு கடல் எல்லையில் மீன்பிடி தொழில் செய்ய வரக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி காரைக்கால் மாவட்ட மீனவா்கள் தொடா்ந்து அத்துமீறி தொழில் செய்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், தடைக்காலம் முடிந்தவுடன் ஜூன் 14-ஆம் தேதி முதல் நாகை, மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.