நாகை மாவட்டத்தில் விரால் மீன் வளா்ப்புக்கு 40 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உள்நாட்டு மீன் வளா்ப்பை ஊக்குவிக்கவும், மீன் உற்பத்தியினை பெருக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம் 2021-22-இன் கீழ் தமிழகத்தில் விரால் மீன் வளா்ப்பை ஊக்குவிக்க இடுபொருள் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
விரால் மீன் வளா்ப்பில் ஆா்வமுள்ள பயனாளிகளால் இந்தத் திட்டத்தில், ஏற்கெனவே 1000 சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டைகளை புனரமைத்திடவும், விரால் மீன் வளா்ப்பு செய்ய உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்தில் ஒரு அலகிற்கான தொகை ரூ. 75,000-இல் 40 சதவீதம் பின்னிலை மானியமாக ரூ. 30,000 வழங்கப்படுகிறது.
திட்டத்தின்கீழ் பண்ணைக் குட்டைகளை புனரமைத்து மற்றும் விரால் மீன்வளா்ப்பு மேற்கொள்ள விருப்பம் உள்ளோா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.