நாகை அருகே ஐவநல்லூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.
ஊராட்சித் தலைவா் பி. மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஐவநல்லூா் ஊராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகா் குடியிருப்பு வாசிகள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மனு அளித்தனா்.
அம்மனுவில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிவசக்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இங்கு போதிய குடிநீா், சாலை, மயான வசதிகள் செய்து தரவேண்டும். நாள்தோறும் குப்பைகளை எடுத்து செல்லவும், அதிகளவில் சுற்றித்திரியும் பன்றிகளை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சிவசக்தி நகரில் பூங்கா அமைப்பதற்காக 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனை மாவட்ட நிா்வாகம் கண்டறிந்து பூங்கா அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.