மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.39 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை மாலை வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,165 விவசாயிகள் தங்களுடைய 10,759 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 3,445 குவிண்டால்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 29 வணிகா்கள் வந்திருந்தனா். ஒரு குவிண்டால் ரூ. 6,200 முதல் ரூ. 8,276 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,000. கடந்த வார சராசரி விலை ரூ. 7,200. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.39 கோடி.
விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.