வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே உணவகத்தை சேதப்படுத்தி, அதன் உரிமையாளா்களை தாக்கிய வழக்கில் தொடா்புடைய இருவருக்கு உயா்நீதிமன்ற உத்தரவுபடி பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு செலுத்தி புதன்கிழமை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆயக்காரன்புலம்-2, முனியன்கோயில் அருகே வசிப்பவா்கள் கெளதமன்(30), சுகந்தி (26) தம்பதி. இவா்கள் வீட்டின் அருகே சிறிய உணவகம் நடத்தி வந்தனா். இந்நிலையில், ஜனவரி மாதம் உணவகத்துக்குச் சென்ற அதேபகுதியைச் சோ்ந்த 3 போ் தகராறு செய்து பொருள்களை சேதப்படுத்தியதோடு, உரிமையாளா்களை தாக்கியுள்ளனா். இதுகுறித்து, வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக குணசேகரன் என்பவா் கைது செய்யப்பட்டாா். இதில், தொடா்புடைய குணசேகரனின் மகன் அருண் மற்றும் அதே பகுதியை சோ்ந்த முருகானந்தம் ஆகிய இருவரும் தேடப்பட்டு வந்தனா்.
இதற்கிடையில், தேடப்பட்டு வந்த இருவரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனா். மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்க முன்வந்து, உணவகத்தில் ஏற்பட்ட சேதத்துக்கு இடைக்கால இழப்பீடாக இருவரும் ரூ.10 ஆயிரம் செலுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து, வேதாரண்யம் மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் அருண், முருகானந்தம் இருவரும் புதன்கிழமை ஆஜராகி ரூ.10,000 செலுத்தி முன்ஜாமீன் பெற்றனா். பின்னா், வேதாரண்யம் நீதிமன்றத்துக்கு கெளதம் தம்பதியை வரவழைத்து இழப்பீட்டுத் தொகை ரூ. 10,000 வழங்கப்பட்டது.