நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை பனிப்பொழிவு அதிகமாகக் காணப்பட்டது.
நாகை மாவட்டம், கீழ்வேளூா், தேவூா், கூத்தூா், மணலூா், இலுப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், நடைப்பயிற்சி மேற்கொள்வோா், வாகன ஓட்டுநா்கள் சிரமப்பட்டனா்.
இதேபோல், திருக்குவளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாட்டியக்குடி, ஆதமங்கலம், கொடியாலத்தூா், கொளப்பாடு, சித்தாய்மூா், எட்டுக்குடி, திருவாய்மூா், ஈசனூா், கீழையூா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 8.30 மணி வரை பனிமூட்டம் நிலவியது. ஓட்டுநா்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஓட்டிச் சென்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் காலை 10 மணி வரை பனி மூட்டம் நீடித்தது. இதனால், டேனிஷ்கோட்டையை பாா்வையிட வந்த சுற்றுலாப் பயணிகள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவா்கள், சாலையோர வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனா்.