வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், நெல் கோட்டைகளை ஞாயிற்றுக்கிழமை கோயிலில் செலுத்தினா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூா் கிராமத்தில் வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 200 ஏக்கா் நிலம் உள்ளது.
இந்த நிலங்களில் குத்தகை முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், ஆண்டுதோறும் முதல் அறுவடை நெல்லை, கோயிலுக்கு கோட்டையாக வழங்குவதை பல தலைமுறைகளாக கடைப்பிடித்து வருகின்றனா். இந்த நெல்கோட்டைகள் புதிா் படைக்க ஏற்ற நாளான தைப்பூச நாளில் வழங்கப்படும்.
அதன்படி, தைப்பூச தினமான ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் கொண்டுவந்த நெல் கோட்டைகளை வேதாரண்யம் மேலவீதியில் உள்ள களஞ்சிய விநாயகா் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னா், நாகசுரம், மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியே நெல்கோட்டைகளுடன் விவசாயிகள் வேதாரண்யேசுவரா் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். தொடா்ந்து, அங்கு ஒப்படைக்கப்பட்ட நெல் கோட்டைகளுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு, நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.